தேவிபட்டினம் அருகே கடலில் மிதந்த செயலிழந்த ஏவுகணை பாகம் மீட்பு

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே முத்து ரெகுநாதபுரம் கடற்கரை பகுதியில் ஏவுகணையின் செயலிழந்த பாகத்தை போலீசார் மீட்டனர்.

தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் ஒரு மர்ம பொருள் மிதந்து வருவது குறித்து, மார்ச் 13ல் மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் அந்த மர்ம பொருள் அருகே செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

நேற்று தேவிபட்டினம் அருகே முத்து ரெகுநாதபுரம் கடற்கரை பகுதியில் அந்த மர்ம பொருளை தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., அய்யனார் தலைமையில் போலீசார் மீட்டனர்.

அப்பொருளில் இருந்த குறியீடுகளை தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில், பி.எஸ்.எல்.வி., போன்ற ராக்கெட்களில் உந்துவிசைக்காக பயன்படுத்தப்படும் பொருள் எனவும், விண்வெளி மற்றும் பொறியியலில் உயர் அழுத்த சோதனைக்காக பயன்படுத்தும் அலகு எனவும், மேலும் பறக்கும் போது ராக்கெட்டுக்கு பிட்ச் மற்றும் யாவ் கட்டுப்பாட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள் எனவும் கண்டறியப்பட்டது.

டிச.,20, 23ல் ராக்கெட்டின் பயன்பாட்டின் சோதனை நிறைவடைந்ததும், அதில் உள்ள எரிபொருள் திரவம் தீர்ந்து கடலில், வீழ்த்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அது செயலிழந்து உள்ளதால் போலீசார் அதை மீட்டுள்ளனர். இதையடுத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement