துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்; விமான சேவை பாதிப்பு

18

நமது நிருபர்




துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை யுஏஇ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.

இந்நிலையில் இன்று (மார்ச் 16) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. எண்ணெய் கிடங்கில் தீ பற்றி எரிந்தது. ஆனால் நீண்ட நேரம் போராடி தீயை துபாய் தீயணைப்பு படை வீரர்கள் கட்டுப்படுத்தினர்.



சம்பவ இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் விரைந்தது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை துபாய் மீட்புக்குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.


இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாய் வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.


துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பியதாக துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


@block_P@

திரும்பி வந்தது விமானம்

துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் பாதியிலேயே , மீண்டும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கே திரும்பியது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.block_P


@block_Y@

சென்னைக்கே விமானம் U டர்ன்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 200 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் துபாய் நோக்கி புறப்பட்டு சென்றது. துபாய் விமான நிலையம் அருகே நடந்த ட்ரோன் தாக்குதலால் அந்நாட்டு வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் குஜராத் கடல் எல்லை விமானம் சென்ற நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டது.


பிறகு விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி வந்தது. பிறகு சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.block_Y



@block_G@

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

துபாய் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணங்களை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. block_G


@block_B@

படிப்படியாக துவங்கும்!

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் படிப்படியாக துவங்கும். பயணிகள் தங்கள் விமானப் பயணங்கள் குறித்த தகவல்களை, அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. block_B

Advertisement