இடியுடன் ஆலங்கட்டி மழை

கோவை: பல்வேறு பகுதிகளிலும் பெய்த கோடை மழையால், கோவை நகரம் குளிர்ச்சியடைந்தது.

கோவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டு பிப்., இறுதியில் இருந்தே வெய்யிலின் தாக்கம் அதிகரிக்கத்துவங்கியது.

மக்கள் வெய்யிலின் தாக்கத்தை தவிர்க்க இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை தேடத் துவங்கினர். வெப்பம் காரணமாக பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை, அன்னுார், கோவில்பாளையம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோல்டுவின்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.


இன்று மாலை காந்திபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சாய்பாபா காலனி, வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

கோவைபுதுார், மதுக்கரை, திருமலையாம்பாளையம், சீராபாளையம் உள்ளிட்ட பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின், ஆலங்கட்டி மழை பெய்தது. குழந்தைகள் ஐஸ் கட்டிகளை கையில் சேகரித்து குதுாகலமடைந்தனர். திடீர் மழையால் கோவை நகரம் குளிர்ச்சியடைந்தது.

Advertisement