விடுமுறையை மறுத்ததால் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை

லக்னோ: உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் உள்ள வங்கிக் கிளையில், விடுமுறையை மறுத்த மேலாளரை, காவலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

உ.பி.,யின் காஜியாபாத் அருகே உள்ள லோனி என்ற இடத்தில், பஞ்சாப் - சிந்து வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றியவர் அபிஷேக் குமார், 34. பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் லோனி கிளைக்கு மாற்றப்பட்டார்.

காஜியாபாதில், மனைவியுடன் வாடகை வீட்டில் அபிஷேக் குமார் வசித்தார். நேற்று பிற்பகலில் வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் சிலர் இருந்தபோது, வங்கி காவலாளி ரவீந்திர ஹூடா, 50, தன் நண்பர் சிசுபால், 57, என்பவருடன் மேலாளர் அறைக்கு துப்பாக்கியுடன் சென்றார்.

அங்கு திடீரென மேலாளர் அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, டில்லியில் உள்ள ஜி.டி.பி., மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அபிஷேக் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மேலாளரை சுட்டு விட்டு தப்பிய காவலாளி ரவீந்திர ஹூடாவை, அருகேயுள்ள மதுக்கடையில் மது அருந்தியபோது, போலீசார் கைது செய்தனர்.

காவலாளி ஹூடா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த இரு மாதங்களுக்கு முன், வங்கியில் காவலாளியாக சேர்ந்துள்ளார். விடுமுறை மற்றும் சம்பள பிரச்னை தொடர் பாக அபிஷேக் மற்றும் அவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று, மேலாளர் அபிஷேக் குமாரிடம் ரவீந்திர ஹூடா விடுப்பு தரும்படி கேட்டுள்ளார். அவர் தராததால் ஆத்திரமடைந்த ஹூடா, துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்று தப்பியோடியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement