கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன்கள் வினியோகம்; தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்

2


சென்னை: ''திருப்பூர், கரூர், ஈரோடு கலெக்டர் அலுவலகங்களில், யாரால் யாருக்கு மொபைல் போன்கள் வழங்கப்பட்டன என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்,'' என,. அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை கூறினார்.


தி.மு.க., தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்த பின், அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது என்பது விதி. ஆனால், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 2,063 மொபைல் போன்களை, அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க இருந்தனர். இதுகுறித்து கேட்டபோது, தனக்கு தெரியவில்லை என, கலெக்டர் கூறியுள்ளார்.


அதன் பின், மொபைல் போன்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல திருப்பூர், கரூர், ஈரோட்டில் நேற்று முன்தினம் மொபைல் போன்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை யாரால் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்.


இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, தி.மு.க., வக்கீல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வினர் மீது ஊழல் கறை பூச நடத்தப்படும் நாடகம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement