சிறுமிக்கு தி.மு.க., நிர்வாகி பாலியல் வன்கொடுமை: வானதி கண்டனம்

சென்னை:'செங்கல்பட்டு அருகே, 6ம் வகுப்பு மாணவிக்கு, தி.மு.க., நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர்' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இருளர் சமூகத்தை சேர்ந்தவர், 6ம் வகுப்பு மாணவி. அவரிடம், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதை, மற்றொருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் புகார் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்குமுன், தி.மு.க., நிர்வாகிகள் மகளிரை இழிவாகத்தான் பேசி வந்தனர். தற்போது, பெண்களிடம் அத்துமீறும் அளவிற்கு, 'அப்கிரேட்' ஆகி உள்ளனர் என்றால், தி.மு.க., அரசு, பெண்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதை, சமீப கால சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

வெளியில் செல்லும் பெண் பிள்ளைகள் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழும் கொடூர சூழல் ஏற்பட்டுள்ளது வெட்கக்கேடு.

பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில், தி.மு.க., மகளிர் அணியினர் மவுனம் சாதித்து, மாநாடு நடத்துவதிலேயே மும்முரமாக உள்ளது பெரிய துரோம்.

தமிழக மக்கள் ஒருபோதும் இதை மன்னிக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்புவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement