அரிதான புற்றுநோய் கட்டி 64 வயது மூதாட்டிக்கு அகற்றம்

சென்னை: வி.எஸ்., மருத்துவமனையில் 64 வயது மூதாட்டிக்கு, அரிதான மார்பக புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவமனையின் நிறுவன தலைவர் சுப்பிரமணியன், புற்றுநோயில் நிபுணர் வெங்கடாசலம் வீரப்பன் ஆகியோர் கூறியதாவது:

சென்னையைச் சேர்ந்த, 64 வயது மூதாட்டி ஒருவருக்கு, வலது மார்பகத்தில் அரிதான, 'மயோபெரிசைட்டோமா' என்ற அரிய புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டது. இந்த வகை கட்டி, கை, கால்கள் மற்றும் கழுத்து பகுதியில் தோன்றும் நிலையில், அரிதாக மார்பக பகுதியில் தோன்றியது.

மருத்துவக் குழுவினர், அதிநவீன 'ஆன்கோபிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை வாயிலாக, மிக துல்லியமாக கட்டியை முழுமையாக அகற்றியதோடு, மார்பகத்தையும் வெற்றிகரமாக தக்கவைத்துள்ளனர்.

இந்த நவீன சிகிச்சையால், நோயாளியின் உடல்நிலை விரைவாகச் சீராகி, அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திலேயே, அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

மார்பகத்தில் 'மயோபெரிசைட்டோமா' கட்டி ஏற்பட்டதாக, உலகளவில் மிக சில நிகழ்வுகள் மட்டுமே மருத்துவ பதிவுகளில் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement