தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க., மேயர், கவுன்சிலர் உட்பட மூவர் மீது வழக்கு

5

வேலுார் : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, இளைஞர்களுக்கு அரசு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியது தொடர்பாக, வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர், தி.மு.க., கவுன்சிலர் உட்பட மூன்று பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மார்ச் 18 ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, “மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி., நகரில் மாநகராட்சி மேயர் சுஜாதா, நேற்று காலை, அங்குள்ள இளைஞர்களுக்கு அரசின் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வினியோகம் செய்துள்ளார். தகவலறிந்து அ.தி.மு.க.,வினரும், தேர்தல் அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றவுடன், மேயர் அவசர அவசரமாக காரில் ஏறி, நிலையான கண்கணிப்பு குழு சோதனையிலும், காரை நிறுத்தாமல் சென்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவித்தார். இதுதொடர்பான விடியோ காட்சிகளையும் வெளியிட்டார்.

இதனையடுத்து, தேர்தல் நிலைக்குழு அலுவலர் சதீஷ் வேலன் சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்படி, வேலுார் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சதீஷ்குமார், கார் ஓட்டுநர் கோபிநாத் ஆகிய மூன்று பேர் மீதும், இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், மேயர் வந்து சென்ற காரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement