தோனி சொல்றார்... சாம்சன் செய்றார்: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: பயிற்சியின் போது தோனி, சஞ்சு சாம்சன் சகஜமாக பேசிக் கொண்டனர். இந்த உற்சாகத்தில் சென்னை அணிக்காக அசத்த காத்திருக்கிறார் சாம்சன்.
பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரின் 19வது சீசன் வரும் 28ல் துவங்குகிறது. சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. மார்ச் 30ல் கவுகாத்தியில் நடக்க உள்ள லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் மோத உள்ளன. இதற்காக, சென்னை அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தலைவிதி மாற்றம்: அப்போது அனுபவ தோனி, 44, புது வரவான சாம்சன், 31, அமர்ந்து முதல் முறையாக பேசினர். இந்த 'வீடியோ'வை சென்னை அணி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. பின்னணியில் சாம்சன் பேசுகிறார். அதில்,'பிரிமியர் தொடரில் ரசிகர்கள் முன்னிலையில் பல முறை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனாலும் தனியாக சந்தித்து பேச ஆசைப்பட்டுள்ளேன். தற்போது தோனியுடன் 'டிரஸ்சிங் ரூமை' பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை தலைவிதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அவருடன் விளையாடுவது, காலை உணவு சாப்பிடுவது, பயிற்சி மேற்கொள்வது உண்மையிலேயே உற்சாகமான அனுபவமாக இருக்கும். இதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
வலுவான துவக்கம்: பிரிமியர் அரங்கில் சாம்சன், 3 சதம், 26 அரைசதம் உட்பட 4704 ரன் (177 போட்டி) எடுத்துள்ளார். 219 சிக்சர் விளாசியுள்ளார். கடந்த முறை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். இம்முறை சென்னை அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். ருதுராஜ் இடம் பெறாத சமயத்தில் கேப்டன் வாய்ப்பு வழங்கப்படலாம். தோனிக்கு பதிலாக 'கீப்பிங்' செய்ய வாய்ப்பு உண்டு.
சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில், துவக்க வீரராக மிரட்டினார் சாம்சன். 5 போட்டியில் 321 ரன் (ஸ்டிரைக் ரேட் 199.37) விளாசி, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். சிறப்பான 'பார்மில்' உள்ள இவர், ரவிந்திர ஜடேஜா இல்லாத குறையை போக்க வேண்டும்.
சேப்பாக்கம் மைதானத்தில் பேசிய போது, வெற்றிக்கான வியூகம் பற்றி பல ஆலோசனைகள் சொல்லியிருப்பார் தோனி. இவற்றை சாம்சன் நிறைவேற்றினால், சென்னை அணி 6வது முறையாக கோப்பை கைப்பற்றலாம்.
விலகினார் ஹர்ஷித் ராணா
கொல்கட்டா: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. சமீபத்திய 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பந்துவீசினார். அப்போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய இவருக்கு ஆப்பரேஷன் நடந்தது. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கொல்கட்டா அணியில் இடம் பெற்றிருந்தார். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில், பிரிமியர் தொடரில் இருந்தும் விலகினார்.
ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் சிமர்ஜீத் சிங், ஆகாஷ் மத்வல், சந்தீப் வாரியர் என இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். கொல்கட்டா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவும், உடற்தகுதி இல்லாமல் அவதிப்படுகிறார். இதனால், இலங்கை கிரிக்கெட் போர்டு அனுமதி தரவில்லை. இதுவும் கொல்கட்டா அணிக்கு சிக்கல் தந்துள்ளது.
* ராஜஸ்தான் அணியின் சாம் கர்ரான் (தொடைப்பகுதி), சென்னையின் நாதன் எல்லிஸ் (கால் தசைநார்), ஐதராபாத்தின் கம்மின்ஸ் (முதுகு வலி), பெங்களூருவின் ஹேசல்வுட் (கால் தசைநார்), லக்னோ வீரர் ஹசரங்கா (தசை நார்) என பல வீரர்கள் காயத்தால் முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டர்.