100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு  விழிப்புணர்வு

திருப்பூர்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை இலக்காக கொண்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, 'தேர்தல் காளையன்' லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே, கொடியசைத்து துவக்கிவைத்தார். மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஸ்கூட்டரில் பங்கேற்றனர். 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல', 'தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்போம்' என்கிற பதாகைகள் ஏந்தியவாறு, கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து, தென்னம்பாளையம் வரை ஊர்வலமாக சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ரத்தினசாமி உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.



* தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மனித உடல், காளையின் முகம் கொண்ட, 'தேர்தல் காளையன்' என்கிற லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆள்காட்டி விரலால் ஆட்சி அமைப்போம் என்கிற வாசகத்துடன் கூடிய, தேர்தல் காளையன் மெகா லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் காளையன் முன் நின்று, செல்பி எடுத்தனர்.



* திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சிவ பிரகாஷ் துவக்கிவைத்தார். 'ஜனநாயகம் காக்க வாக்களிப்போம்; என் மை என் உரிமை; வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை' என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட போர்டில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர். பஸ் பயணிகள் உள்பட பொதுமக்களுக்கு, தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement