ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி

திருப்பூர்: அக்ரஹாரப்புத்துாரில், ஆக்கிரமிப்பில் பஸ் ஸ்டாப் நிழற்குடை கட்டாமல், வேறு இடத்தில் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி அக்ரஹாரப்புத்துாரில், பஸ் ஸ்டாப் நிழற்குடை பழுதாகியிருந்தது. கோவை எம்.பி., நிதி எட்டு லட்சம் ரூபாயில், புதிய நிழற்குடை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.



பழைய நிழற்குடை, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது; அதற்கு பிறகு, சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது; ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், பஸ் ஸ்டாப் அருகே ரோடு குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், பழுதான நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இருப்பினும், ரோட்டை ஆக்கிரமித்து, சாக்கடை கால்வாயின் மீது கட்டாமல், ரோட்டரி மருத்துவமனை அருகே நிழற்குடை அமைக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.

துகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சாக்கடை கால்வாய் மீது மூடி அமைத்து, அதன்மீது நிழற்குடை கட்டும் பணி துவங்கியுள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து, நிழற்குடை கட்ட, மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. அதிக நெருக்கடி ஏற்பட்டு வருவதால், ரோட்டை ஆக்கிரமித்து நிழற்குடை அமைக்காமல், மேற்கு ரோட்டரி மருத்துவமனை அருகே, விசாலமான இடம் இருக்கிறது; அப்பகுதியில், நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

Advertisement