களத்துாரில் வீணாகும் புதிய ரேஷன் கடை

அச்சிறுபாக்கம்: களத்துார் ஊராட்சியில், 10 ஆண்டுகளாக ரேஷன் கடை திறக்கப்படாமல், பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இம்மக்களின் தேவைக்காக, முருங்கை- கொங்கரை சாலையில், 2015 - 16 ஆம் ஆண்டில், 6.30 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், கட்டடத்தை திறக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது, இரண்டு கி.மீ., துாரம் நடந்து சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வர, முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரு சமூகத்துக்கு இடையேயான முரண்பாடு காரணமாக, கடை திறக்கப்படாமல் உள்ளதாக பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடையை திறக்க, மாவட்ட நுகர் பொருள் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement