அரசு அதிகாரி தற்கொலை வழக்கு பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாபில், அரசு அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில், அம் மாநில போக்கு வரத்து துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், 44, ராஜினாமா செய்தார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

வீடியோ இங்குள்ள தார்ன் தரன் மாவட்டத்தின், பட்டி தொகுதி எம்.எல்.ஏ-.,வான லால்ஜித் சிங் புல்லர், மாநில அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

சமீபத்தில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அரசு கிடங்கு கழகத்தின் மாவட்ட மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். உயிரிழப்பதற்கு முன், சமூக வலைதளங்களில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், 'என் தற்கொலைக்கு அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தான் காரணம்' என, குறிப்பிட்டிருந்தார். இது, பஞ்சாப் அரசியலில் புயலை கிளப்பியது.

இது குறித்து, சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜித்தியா கூறியதாவது:

அமைச்சர் லால்ஜித் சிங் புல்லரின் உதவியாளர் ஒருவருக்கு டெண்டர் ஒதுக்கக் கோரி, ககன்தீப் சிங் ரந்தாவாவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

முடிவு இதற்காக, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொள்ளும்படியும் அவரை கட்டாயப் படுத்தினர்.

ஆனால், அவர் தகுதியான ஒருவருக்கு டெண்டரை ஒதுக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், ககன்தீப் சிங் ரந்தாவாவை தன் வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதோடு, அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பஞ்சாப் போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சர் பதவியை லால்ஜித் சிங் புல்லர் நேற்று ராஜினாமா செய்தார்.

அவர் கூறுகையில், ''என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை; பொய்யானவை. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம். விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன்,'' என்றார்.

Advertisement