தேர்தல் துாதர்களாக தஞ்சாவூர் பொம்மைகள்

சென்னை: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தேர்தல் துாதர்களாக, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்ட சபை தேர்தல், ஏப்., 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, மக்களிடம் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, 2026 சட்டசபை தேர்தல் துாதர்களாக, தஞ்சாவூர் பொம்மைகளை, தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பெண் பொம்மைக்கு மெய்யாள் என்றும், ஆண் பொம்மைக்கு மெய்யன் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பு. புவியீர்ப்பு மையத்தின் அடிப்படையில், எப்பக்கமும் விழாமல், சம நிலைக்கே திரும்புவது, இந்த பொம்மை தயாரிப்பின் சிறப்பம்சம்; இது வாக்காளர்கள் எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாமல் வாக்களிக்க வேண்டும் எனக் குறியீடாக காட்டுகிறது.

நம் தேர்தல் துாதர்கள் உண்மையின் வெளிப்பாடாக, மெய்யன், மெய்யாள் என்று அழைக்கப்படுகின்றனர் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement