மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் விரைவில் ரயில் சேவை துவக்கம்

பெங்களூரு: மெட்ரோ ரயில் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ரயில் சேவை, மே மாதம் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு பன்னரகட்டா சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். இந்த சாலையில் போக் குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மெட்ரோ ரயில் இளஞ்சிவப்பு வழித்தடத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

காளேன அக்ரஹாரா - தாவரகெரே இடையே முதல் கட்டமாக மெட்ரோ ரயில் இயங்க உள்ளது. 7.50 கிலோ மீட்டர் துாரம் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில், தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, ரயில்கள் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த வழித்தடத்தில், வரும் மே மாதம் ரயில் சேவை துவங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக ஆறு ரயில்கள் இயக்கத்திற்கு வர உள்ளன. இந்த வழித்தடத்தில் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ரயில் சேவை துவங்கியதும் பன்னரகட்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement