டிராக்டர் மோதி 15 ஆடுகள் பலி

செஞ்சி: செஞ்சி அருகே கரும்பு லோடு டிராக்டர் மோதி 15 வெள்ளாடுகள் இறந்தன.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 32; இவருக்கு சொந்தமான 40 வெள்ளாடுகளை நேற்று மதியம் 12:15 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன், 18; என்பவர் மேய்ச்சலுக்காக செஞ்சி - அனந்தபுரம் ரோட்டில் ஓட்டிச் சென்றார்.

அப்போது, அணையேரி கிராமத்தில் இருந்து சேகர் என்பவருக்கு சொந்தமான கரும்புகளை இரட்டை டிப்பர் இணைக்கப்பட்ட டிராக்டரில் ஏற்றி கொண்டு செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்றது. டிராக்டரை நந்திவாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 40; ஓட்டினார்.

வரிக்கல் தனியார் ரைஸ்மில் அருகே எதிரே வந்த மினி வேனுக்கு வழிவிட வலதுபக்கம் ஒதுங்கிய போது, ஓரமாக சென்று கொண்டிருந்த வெள்ளாடுகள் கூட்டதின் மீது மோதியது. இதில் 15 வெள்ளாடுகள் அதே இடத்தில் இறந்தன. 10 வெள்ளாடுகள் படுகாயம் அடைந்தன.

அனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement