மின்வாரிய அதிகாரி போல் நடித்து அடுத்தடுத்து பணம் கொள்ளை

இடையகோட்டை: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மின்வாரிய அதிகாரி போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் தேடுகின்றனர்.

இடையகோட்டையை சேர்ந்த தண்டபாணி, தனது தோட்டத்து வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை டூவீலரில் அங்கு வந்த நபர், மின்வாரிய அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி வீட்டில் சோதனை செய்ய முயன்றார். இங்குள்ள மின்வாரிய அதிகாரிகளை எனக்கு தெரியும் எனக்கூறி தண்டபாணி அலைபேசியை எடுக்கவே, அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

இதேபோல் அருகில் உள்ள முத்துசாமி தோட்டத்திற்கு சென்று தான் மின்வாரிய அதிகாரி என கூறியுள்ளார்.

இதை நம்பிய முத்துசாமி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்தார். அப்போது சட்டை பையில் இருந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பினார்.

இதன் பின் அவ்வழியாக டூவீலரில் வந்த வலையபட்டி மர வியாபாரி காளியிடம் வழி கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.10,000 பறித்தார்.

தொடர்ந்து கருமாசநாயக்கனுாரில் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பினார். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்கள் குறித்து இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement