மணப்பட்டு கிராமத்தில் செந்தில்குமார் ஓட்டு சேகரிப்பு 

பாகூர்: பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று மணப்பட்டு கிராமத்தில் வீடு விடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அவருக்கு, பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வேட்பாளர் செந்தில்குமார் கூறுகையில், 'மணப்பட்டு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளது. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில், பிரதான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகம், பள்ளி கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கம், அங்கன்வாடி, ரேஷன் கடை, நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டியுள்ளது.

மணப்பட்டு கிராமத்தில், சுற்றுலா துறை மூலமாக திரைப்பட நகர திட்டத்திற்காக, 100 ஏக்கர் இடம் கையப்படுத்தி 2006ம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ளது. வரும், 5 ஆண்டுகளில் அதற்கான பணியை துவங்கி, இங்கு ஒரு சுற்றுலா நகரம் அமைந்தால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது. மணப்பட்டு என்ற கிராமம் இந்தியா முழுதும் அறியு முடியும். மக்களின் கோரிக்கையை வாக்குறுதியாக முன்னிறுத்தி ஓட்டு சேகரித்து வருகிறோம். மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.

தமிழக திராவிட மாடல் ஆட்சியில் உள்ள திட்டங்கள், இங்குள்ள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இலவச பஸ், நான் முதல்வன், பெண்கள் கல்வி உதவி தொகை, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை வரும் ஆட்சி காலத்தில் புதுச்சேரியிலும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி உள்ளது.

இவற்றை முன்வைத்து நாங்கள் ஓட்டு சேகரித்து வருகிறோம். வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு ஓட்டு சேகரித்து வருகிறோம்' என்றார்.

ஓட்டு சேகரிக்கும் போது, தி.மு.க., மற்றும் காங்., நிர்வாகிகள், மணப்பட்டு கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

Advertisement