தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்

11


துாத்துக்குடி: ''தனித்துப் போட்டியிடுவதாக விஜய் சொன்னால், சொல்லி விட்டுப்போகட்டும். புதிதாகத்தானே வந்து இருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவருக்கு விவரம் தெரியும்,'' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் சீட் கேட்கிற அளவுக்கு கொடுக்க முடியுமா? அது விவரமாக சொல்லக்கூடாது என்று கருதுகிறேன். முதலில் 10 சீட் கேட்டார். பிறகு 5 சீட் கேட்டார். பேச்சுவார்த்தை நேரடியாக இல்லை. வேறு ஒருவர் மூலமாக அவர் கேட்ட 5-10 சீட்டுகளையும் தர இயலாது என நாங்கள் கூறிவிட்டோம். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போது, எங்களுடன் கூட்டணியில் இல்லையே? அதுமட்டுமல்ல சொல்லக்கூடாது. சொல்ல வைக்கிறார்.



ஒவ்வொரு கூட்டணியில் கட்சி சேரும் போது, அந்தந்த கட்சி வாக்கு வங்கிற்கு ஏற்ப, அந்த கட்சி பெற்ற வாக்கின் அடிப்படையில் தான், சீட் கொடுப்பார்கள். 31 தொகுதியில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கி இருக்கிறார். அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம், அந்தந்த கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையில் தான், சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அது அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி. அப்படி தான் கடைபிடிக்கிறார்கள்.


அந்த அடிப்படையில் கடைபிடித்தால் பரவாயில்லை. அதிக தொகுதிகள் கேட்டு ஆள் அனுப்பினார். நேரடியாக பேச்சுவார்த்தை இல்லை. நாங்கள் கொடுக்க இயலாது என கூறினோம், அதோடு முடிந்து போனது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இன்று திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தான் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளார்கள். இதுவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சிறந்த உதாரணம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

கேள்வியும், பதிலும்!





கேள்வி:
விஜய் தனித்து போட்டியிடுவதாக கூறி இருக்கிறாரே?

இபிஎஸ்: அவர் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும், புதிதாகத்தானே வந்து இருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவருக்கு விவரம் தெரியும்..

கேள்வி:
அதிமுக - பாஜக கூட்டணியில் முரண்பாடு இருக்கிறது, அதிருப்தி என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்களே...?

இபிஎஸ்:
எந்த அதிருப்தியும் இல்லை. எங்கே அதிருப்தி இருக்கிறது..? ஊடகங்கள் திரித்துப் போட வேண்டாம். திமுக கூட்டணியில் கடந்த 23 நாட்களாக பேசிக்கொண்ட இருந்தார்கள்., இரண்டு தினங்களுக்கு முன்பு தான் இறுதி செய்யப்பட்டது. காங்கிரசுக்கும் திமுகவிற்கும் கிட்டதட்ட 18 நாட்கள் வார்த்தைப்போர்.

செய்திகள் வந்தன. ஒரு கால கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி விடும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டது. காங்கிரஸ் தலைவரும், பொறுப்பாளர்களும் பல்வேறு கருத்துக்களை பேசி வந்தனர். ஆனால் அதிமுக கூட்டணியில் சிறு கடுகளவு கூட பிரச்னை இல்லை'' என்றார்.

Advertisement