சிதம்பரத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா :அ.தி.மு.க., 'டப்' கொடுக்க களமிறங்கியது ம.ஜ.க.,

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க., வேட்பாளராக பாண்டியன் களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி சார்பில், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி களமிறக்கப்பட்டுள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலை தன்னகத்தே கொண்டது சிதம்பரம் சட்டசபை தொகுதி. இங்கு, விவசாயம், மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.

விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. வன்னியர்கள், ஆதிதிராவிடர்களுக்கு அடுத்ததாக மீனவர்கள், முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் கடந்த, 1952, ல் வாகீசன் பிள்ளை, சுவாமி சகஜானந்தா (காங்.,), 1957 ல் வாகீசன் பிள்ளை, சுவாமி சகஜானந்தா (காங்.,) 1962 ல் சிவசுப்பிரமணியன் (காங்.,), 1967 ல் கனகசபை பிள்ளை (காங்.,), 1971 ல் பொன் சொக்கலிங்கம் (தி.மு.க.,) 1977 ல் துரை கலியமூர்த்தி (தி.மு.க.,) ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.

கடந்த, 1980 தேர்தலில் கணபதி வெற்றி பெற்று முதல்முறையாக தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அடுத்த தேர்தலிலும் கணபதியே வென்றார்.

கடந்த, 1989 ல் தி.மு.க., விடம் தொகுதியை அ.தி.மு.க., பறிகொடுத்தது. அப்போது, துரை கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க) வென்றார். கடந்த, 1991 ல் அழகிரி(காங்.,) 1996ல் கே.எஸ்.அழகிரி (த.மா.கா.,) 2001 ல் துரை சரவணன் (தி.மு.க.,) 2006 ல் அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.,) 2011 ல் பாலகிருஷ்ணன் (மா. கம்யூ., ), 2016 மற்றும் 2021 இரு முறையும் பாண்டியன் (அதி.மு.க.,) எம்.எல்.ஏ., வாக இருந்தனர்.

தொகுதியை காங்., கட்சி 5 முறையும், தி.மு.க., 4 முறையும், அ.தி.மு.க., 5 முறையும், த.மா.கா., ஒரு முறையும் வெற்றி பெற்று, தன் வசம் வைத்திருந்தது.

இந்நிலையில், நடக்க உள்ள தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., பாண்டியன் 3 வது முறையாக மீண்டும் களமிறங்கியுள்ளார்.

கடந்த 2021 தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., கூட்டணி வேட்பாளரான இந்திய முஸ்லீம் லீக் அப்துல் ரகுமானை விட 16 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தற்போது, அ.தி.மு.க., பாண்டியனை எதிர்த்து தி.மு.க., போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க., வை பொருத்தவரை, கடந்த காலங்களை விட பா.ஜ., வளச்சி கண்டுள்ளதாலும், பா.ம.க., உடன் இருப்பதும் பலமாக உள்ளது.

தி.மு.க., ஓட்டுகளை நடிகர் விஜய் கட்சி வேட்பாளர் கணிசமாக பிரித்துவிடுவார் என்றும் அ.தி.,மு.க., கணக்கு போடுகிறது.

மக்கள் செல்வாக்கு உள்ளது என்ற நம்பிக்கையுடன் 3 வது முறையாக களம் இறங்கியுள்ள பாண்டியன், எப்படியும் வெற்றி கணியை பறித்துவிடலாம் என கணக்கு போட்டு, தேர்தல் பணியை முழுவீச்சில் செய்து வருகிறார்.

இருந்தும், தொகுதியில் முஸ்லீம் ஓட்டுகள் தொகுதியில் கணிசமாக உள்ளதும், வி.சி., மற்றும் தி.மு.க.,வின் ஓட்டுகள், அ.தி.மு.க., வை பயமுறுத்தவே செய்கிறது.

Advertisement