வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெண் சிறுத்தை ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது.

இங்கு களக்காடு -- - முண்டன் துறை புலிகள் காப்பக பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இங்குள்ள லோயர் கேம்ப் பகுதியில் சிறுத்தை ஒன்று ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது. நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டறிந்தனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில், வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் அதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விசாரணையில், இறந்தது ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனத்தெரிந்தது. அது பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்ததா, வனவிலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடக்கிறது. பின்னர் அங்கேயே சிறுத்தை உடலை எரியூட்டப்பட்டது.

Advertisement