விதிமுறை மீறினால் நடவடிக்கை ;விருதை டி.எஸ்.பி., எச்சரிக்கை

விருத்தாசலம்: 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என விருத்தாசலம் டி.எஸ்.பி., தெரிவித்தார்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், உட்கோட்ட அளவிலான அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் பிரதாப்சந்திரன், பார்த்தசாரதி, சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு முன்னிலை வகித்தனர்.

இதில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் பகுதிகளை சேர்ந்த தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - வி.சி., - பா.ஜ., - காங்., - கம்யூ., உட்பட அனைத்துக் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அவர் பேசியதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்குள் மனுதாக்கல் அன்று வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கூடுதலாக ஒருவரை கூட அனுமதிக்க முடியாது. 100 மீட்டருக்குள் பைக் அல்லது கார் என மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்களுக்கு 'சுவிதா' என்ற 'ஆப்' மூலம் அனுமதி பெறலாம்.

காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும். ஏதேனும் குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அல்லது என்னிடம் நேரிலோ, போனிலோ தெரிவிக்கலாம். நடத்தை விதிமுறைகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement