தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்

33

- நமது நிருபர் -

அ.தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீட்டில் முந்திக்கொண்டாலும், தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் முட்டல் மோதல்கள் உள்ளன. நேற்று வரை கூட, பா.ஜ.,வால் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. காரணம், ஒதுக்கப்பட்ட தொகுதிகளால் பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. அதனால் தான் பா.ஜ.,வின் அமைப்புச்செயலர் சந்தோஷ், சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார்.

மேலிடத்தினர் மட்டும் அல்லாமல், தமிழக பா.ஜ.,வினர் மத்தியிலும் கடும் அதிருப்தி இருக்கிறது. அதிருப்தியின் வெளிப்பாடாக, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், 'எட்டப்பர்களை வெளியே நிறுத்தும் தலைவர்கள் வேண்டும்' என, தன் கட்சியின் மாநில தலைவர்களை பற்றி நேற்று அறிக்கை வெளியிட்டார். இதைப் போல், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன.

கொங்கு, சென்னை பா.ஜ.,வுக்கு கொங்கு மண்டலத்தில் கணிசமான ஓட்டு இருக்கிறது; குறிப்பாக கோவையில். அங்கு எப்படியும் இரண்டு தொகுதி வரும் என்ற நம்பிக்கை பா.ஜ.,வினரிடம் இருந்தது. அதில் ஒன்று, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒதுக்கப்படும் என, எதிர்பார்ப்பில் இருந்தனர்.

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கோவையில் பா.ஜ.,வுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்க வேண்டியிருக்கும்' என்றார். அது பா.ஜ.,வினரை மேலும் உற்சாகமாக்கியது. ஆனால், கடைசியில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டது.

அதே போல், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில், வசந்தராஜன் என்பவர் தேர்தல் பணியாற்றி வந்தார். அவரது ஆதரவாளர்கள், தொகுதி கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலும் பா.ஜ.,வுக்கு கணிசமான ஓட்டு இருக்கிறது. சென்னையில், தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதிகளில் ஏதேனும் இரண்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்காக, கட்சியின் இளம் தலைமுறையினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக உழைத்து வந்தனர்.

கோவையில் இரண்டு கிடைக்காவிட்டாலும், சென்னையில் கிடைக்கும் தொகுதி ஒன்றில் அண்ணாமலை போட்டியிடுவார் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், இங்கும் ஒரு தொகுதியை தான் வாங்கி வந்தனர். லோக்சபா தேர்தலில், இருமுறை வென்ற, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில், ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என, கட்சியில் பலரும் வலியுறுத்தியும், வாங்கவில்லை.

திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தை முன்வைத்து, ஹிந்து அமைப்புகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தின. பிரதமர் மோடியே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார். ஆனால், அந்த தொகுதியையும் வாங்கவில்லை என்பது பேரதிர்ச்சியாக அமைந்தது.

மாறாக, இன்று வரை தி.மு.க., கோட்டையாக உள்ள திருச்செந்துாரை வாங்கிவிட்டு, சந்தோஷ் விளக்கம் கேட்டபோது, 'அது கோவில் நகரம். கட்சி வளர வாய்ப்பு இருக்கும் என்பதால் வாங்கினோம்' என விளக்கம் அளித்தனர்.

கட்சி பெரிய அளவில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்தில், மூன்று தொகுதிகளை பெற்றது, பா.ஜ., முக்கிய தலைவர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை விட்டுவிட்டு, வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளையே பெரும்பான்மையாக வாங்கி உள்ளனர். 27 தொகுதிகளில், 2021 தேர்தல் முடிவுகள்படி, நான்கு தொகுதிகளில் தான் வாய்ப்புள்ளது; 2024 தேர்தல் முடிவுகள் படி, 10 தொகுதிகளில் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது (பட்டியலை பார்க்க).

தொகுதி மாற்ற முயற்சி இது குறித்து பா.ஜ., நிர்வாகிகளிடம் பேசியபோது:

மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் பேசி, தொகுதிகளை முடிவு செய்தனர். மாநில அமைப்பு செயலர் இல்லாததால், அவர்களின் கைகளே ஓங்கியிருந்தது. பழனிசாமியும் முருகனும் மிகவும் நெருக்கம். பழனிசாமி சொல்வதை முருகன் மறுக்க மாட்டார்.

நயினார் நாகேந்திரன் சொல்பவற்றை பழனிசாமி கேட்டுக்கொள்வதே இல்லை. 'நான் மேலிடத்தில் பேசிக்கொள்கிறேன்' என்று தட்டிக்கழித்து விடுவார். இவர்கள் கட்சிக்காக தொகுதிகளை பெறாமல், சிலரின் சுயநலத்திற்காக தொகுதிகளை பெற்று இருக்கினறனர். வேண்டாதவர்களை வீழ்த்த நடந்த சதிகள் தான் அதிகம்.

இதனால் தான், பி.எல்.சந்தோஷ் வநத்போது கடும் கோபத்தில் பலரை ஒருமையில் திட்டினார். கட்சி மேலிடத்திற்கு மாநில தலைவர்கள் செய்தது துளியும் பிடிக்கவில்லை. இப்போது சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.

கொங்கிலும், சென்னையிலும் கூடுதல் தொகுதிகளுக்கு முயற்சித்து வருகிறார்கள். ஆனால், பழனிசாமி விட்டுக்கொடுப்பாரா என்று தெரியவில்லை.

இவ்வாறு பா.ஜ.,வினர் குமுறுகின்றனர்.

இது தவிர, தேர்தலில் மீண்டும் மீண்டும் தோற்றாலும், போட்டியிட்டவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்ற பிரச்னையும் நடந்து வருகிறது.

Advertisement