தனியார் பால் விற்பனை 30 சதவீதம் குறைந்தது

சென்னை:எரிவாயு தட்டுப்பாட்டால் கணிசமான அளவில், டீக்கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளதாகவும், பால் கொள்முதலும் குறைந்து உள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 83 சதவீதத்தை தனியார் பால் நிறுவனங்கள்தான் வினியோகிக்கின்றன. மீதி 17 சதவீதத்தை அரசு நிறுவனமான ஆவின் வினியோகிக்கிறது. டீக்கடைகள், ஹோட்டல்கள் என உணவு சார்ந்த தொழில்களுக்கு தனியார் பால்தான் அதிகம் வினியோகிக்கப்படுகிறது.

மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றத்தால் வணிக சிலிண்டர்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல டீக்கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன; அல்லது குறைந்த நேரமே இயங்குகின்றன. இதனால் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

தற்போது தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் அளவும் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தின.

ஒரு லிட்டருக்கு 48 ரூபாய் வரை வழங்கியும் பால் கொள்முதல் குறைந்துள்ளது. கடந்த டிச., மாதத்தில் இருந்தே பால் கொள்முதல் தடைபட்டுள்ளது. தற்போதைக்கு தமிழகத்துக்கான பால் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement