இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!

31

திருக்கோவிலுார்: தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை விமர்சித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருக்கோவிலுார் தொகுதியில் நேற்று அவர் பேசியதாவது:

மானத்தை விட்டால், தமிழன் உயிரை விட்டுருவான்னு வாழ்ந்து வந்தோம். இன்று, அரைப்படி அரிசிக்கும், அரை கிலோ வெல்லத்துக்கும், ஒரு முழ கரும்புக்கும் மானத்தை விட்டு நிற்பது கேவலமா இல்லையா? நீ வேலை செய்யல, உழைக்கல, வெம்பாடு படல; கேடு கெட்டவங்க கிட்ட நாட்டை கொடுத்துவிட்டு இருக்கிற.

'பிரிஜ்'ல உளுந்து, அரிசி, பருப்பு வைக்கணும். அதை தரும் விவசாயிய கடன்காரன் ஆக்கிவிட்டு பிரிஜ் தாரேன், மிக்ஸி தாரேன், 'டிவி' தாரேன்னு சொல்றாங்க. நீ மானமுள்ள தமிழன் தானே? மிக்ஸி கொடுத்தான்னு பெருமையா வாங்கிட்ட, டிவி கொடுத்தான்னு வாங்கிட்ட, சேலை கொடுத்தான்னு வாங்கிட்ட, இலவசமா திருமணமும் பண்ணி வச்சிட்டான்.

எல்லாத்தையும் வாங்கிட்டு பெருமையா ஓட்டு போட்டியே, இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா? இதை சொல்லும் போது எவ்வளவு வலிக்குது.

இலவசத்தை வாங்குவது எவ்வளவு மானங்கெட்ட செயல்னு தெரியுதா, தெரியலையா? எனக்கு ஓட்டு போடு, போடாம போ. ஆனா, இந்த இலவசங்களுக்கு காசு எங்கிருந்து வருதுன்னு மட்டும் இலவசங்கள அள்ளி விடறவன்கிட்ட கேளு.

இவ்வாறு சீமான் பேசினார்.

முன்னதாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான், ''நாட்டில் ஒரு கட்சி கூட, இயற்கை வளங்களான நீர், காற்று, மரம், மலை ஆகியவற்றின் நிலை குறித்து பேசுவதில்லை. அ.தி.மு.க.,- - தி.மு.க., ஆகிய இரண்டும், காயலான் கடைக்கு போக வேண்டிய பழுதான கட்சிகள்,'' என பேசினார்.

இதுபோல, நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் சீமான் பேசுகையில், ''இந்த தேர்தலானது, தீய திராவிடர்களுக்கும், துாய தமிழர்களுக்குமான அரசியல் போர். இன்னும் ஒரு முறை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவின் ஒரு மாவட்டமாக திருவண்ணாமலை மாறிவிடும்,'' என்றார்.

@block_B@

'பிணத்துக்கு பதில் பணம்'

திருக்கோவிலுாரில் சீமான் பேசியபோது, கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. ஆம்புலன்ஸ் சென்றபின் பேசிய சீமான், ''இந்த ஆம்புலன்சுக்குள் நோயாளி யாரும் இருப்பது போல் தெரியலியே? தேர்தல் வந்தால், ஆம்புலன்ஸ் அடிக்கடி போகும்; அதில், பொணம் போறதுக்கு பதிலா பணம் போகும். இது ஒரு நுட்பமான திருட்டு; ரொம்ப டெக்னிக்கலா யோசிப்பாங்க, 60 ஆண்டுகளா இதுலயே பழகிட்டாங்க,'' என்றார்.block_B

Advertisement