அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு

19

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேரனுக்கு, இம்முறை 'சீட்' மறுக்கப்பட்டுள்ளது தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க., பொதுச்செயலராகவும், கல்வி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் அன்பழகன். கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் இருந்தவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பின், தேர்தல் போட்டியில் இருந்து அன்பழகன் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பழகன் மறைவிற்கு பின், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் அவரது பேரன் வெற்றியழகன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.



அ.தி.மு.க., வேட்பாளர் ஜே.சி.டி., பிரபாகரை, 37,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், பெரிதாக கட்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.


தி.மு.க.,வில் அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் மகன்களுக்கு 'சீட்' வழங்கப்பட்டு உள்ளது. அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்திக்கிற்கு, வில்லி வாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், வெற்றியழகனுக்கு 'சீட்' வழங்காதது, அன்பழகன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement