உயிரினும் மேலானது தேசப்பற்று :ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பேச்சு
சென்னை: ''உயிரினும் மேலானது தேசப்பற்று; ராணுவத்தில் பணிபுரிவது வேலை அல்ல, அது வாழ்க்கை,'' என, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அருண் அனந்தநாராயன் பேசினார்.
மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லுாரியில், 'கலைமகள்' மாத இதழ் மற்றும் 'ஆர்யா பவுண்டேசன்' இணைந்து, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை கவுரவிக்கும், 'ராயல் சல்யூட்' நிகழ்ச்சியை நேற்று நடத்தின.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்யா பவுண்டேசன் நிறுவனர் சுரேஷ் ஆர்யா வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அருண் அனந்தநாராயன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சுரேஷ், ராமசந்திரன், தண்டபானி ரமேஷ், ராதாகிருஷ்ணன், சேது கோபிநாத், நாராயணன் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், 2014ல் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் ஆகியோருக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அருண் அனந்தநாராயன் பேசியதாவது:
சீருடை அணிந்து தான் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பது அல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தேசம் காக்கும் ராணுவ வீரர்கள் தான். என்னை பொறுத்தவரை, ராணுவத்தில் பணிபுரிவது வேலை அல்ல, அது தான் வாழ்க்கை. உயிரினும் மேலானது தேசப்பற்று.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, சேரன் குளம் என்ற கிராமத்தில் பிறந்த ஆர்யா என்ற பாஷ்யம் அய்யங்கார், 1932, ஜன., 26ல், பிரிட்டீசாரின் கெடுபிடியை மீறி, செயின் ஜார்ஜ் கோட்டையில், 200 அடி கொடி கம்பத்தில் ஏறி, நம் நாட்டின் தேசிய கொடியை பறக்கவிட்டார்.
இந்த தீரம் மிக்க வீர வரலாறுகளை தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். 1932ம் ஆண்டில் துவங்கப்பட்ட கலைமகள் மாத இதழ், அப்பணியை செய்து வருவது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.