ஏழைகளுக்கு அரசு திட்டம்  கிடைக்க உதவும் கவுசியா

- -நமது நிருபர் -

அரசிடம் இருந்து ஏழைகளுக்காக பல நல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் திட்டங்கள் மூலம் எப்படி பயன் அடைய வேண்டும் என்று படிக்காத, பாமர மக்களுக்கு தெரிவது இல்லை. இதனால் பல திட்டங்கள் அவர்களுக்கு கிடைப்பதே இல்லை. சில நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மூலம் மக்களுக்கு, அரசின் திட்டங்கள் கிடைக்கின்றன. இவர்களில் ஒருவர் கவுசியா கான்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசிக்கிறார். வக்கீலான இவர் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

இதுகுறித்து கவுசியா கான் கூறியதாவது: கடந்த 2008 - 2009 காலகட்டத்தில் நான் கேரளாவில் படித்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் எனது வீடு அமைந்திருக்கும் சாலையில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி என் வீட்டின் அருகே ஹோட்டல் கட்ட திட்டமிட்டார். ஹோட்டல் கட்டுவதற்கு எங்களது சிறிய வீடு அவருக்கு இடைஞ்சலாக இருந்தது.

சில அரசியல்வாதிகள் எனது தந்தையை அணுகி, வீட்டை விற்கும்படி கேட்டனர். மூதாதையர் சொத்து என்பதால் விற்க மறுத்தார். இதனால் அரசியல்வாதிகளிடம் இருந்து, எனது தந்தைக்கு அழுத்தம் வந்தது. விடுமுறைக்கு வந்த நான் தந்தை படும் கஷ்டத்தால் மீண்டும் படிக்க செல்லாமல் அங்கேயே

தங்கினேன்.

சில அமைப்புகளுடன் சேர்ந்து, எனது வீட்டை பாதுகாக்க போராட்டம் நடத்தினேன். அதிகாரிகள் சிலர் எங்களை வீட்டில் இருந்து காலி செய்வதில் உறுதியாக இருந்தனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் என் சகோதரி ஆசியா கான், தந்தை சந்த் பாஷா இறந்தனர்.

ஆனாலும் தனியாக போராடினேன். தேசிய மனித உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். இதனால் எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. எனது வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடத்தில் ஹோட்டல் கட்டினர். தற்போது எனது வீடு உள்ளது. பாழடைந்து இருந்தாலும், அரசியல்வாதிகளை எதிர்த்து போராடி வீட்டை காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்கு உள்ளது.

படிப்பால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும் என்று நினைத்து, வக்கீலுக்கு படித்தேன். இந்த சமூகத்தில் பெரிய நபர்களால் பாதிக்கப்படுவோருக்கு உதவுவதுடன், அவர்களுக்கு அரசின் சலுகை கிடைக்கவும் பாடுபடுகிறேன். இது திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement