இன்று த.வெ.க. - நாம் தமிழர் மனு தாக்கல்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் மனுத்தாக்கல் முதல் நாளான இன்று வளர்பிறை பிரதோஷ நாள் என்பதால், பெரும்பாலானோர், மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. கட்சி முடிவின்படி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள, 234 தொகுதிகளிலும் இன்று மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 2ம் தேதி வியாழக்கிழமை என்றாலும், பிரதமை திதி என்பதால், அந்நாளில் மனுத்தாக்கல் செய்வது வாய்ப்பு குறைவு. அடுத்து, 4ம் தேதியும், 6ம் தேதியும் நல்ல நாட்கள்; குறிப்பாக, 6ம் தேதி சதுர்த்தி திதி, மதியம், 1:48 மணி வரை இருக்கிறது; சுபமுகூர்த்த நாள் என்பதும் கூடுதல் சிறப்பு; முழுவதும் சித்தயோகம் என்பதாலும், கடைசி நாள் என்பதாலும், அந்நாளில் மனுத்தாக்கல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக, ஜோதிடர்கள் கூறுகின்றனர். அனைத்து தொகுதிகளிலும், 6ம் தேதி தான், அ.தி.மு.க., வேட்பாளரின் மனுத்தாக்கல் நடக்கிறது.
* தாராபுரம் தொகுதிக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யவேண்டும். காங் கயம் தொகுதிக்கு தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால், இன்று காலை, படிவம் - 1 வாயிலாக, வேட்பு மனு பெறப்படும் நாள்; இடம், மனு தாக்கல் இறுதிநாள், பரிசீலனை தேதி மற்றும் நேரம், திரும்ப பெறும் நாள், ஓட்டுப்பதிவு நேரம் மற்றும் நாள் விவரங்கள் உள்ளடக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.

Advertisement