அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலில், இதுவரையில் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஈரானில் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, உலக நாடுகளிடையே கச்சா எண்ணெய் பற்றாக்குறையை ஈரான் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, போர் நிறுத்தம் செய்வதற்காக 15 அம்ச அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இதற்காக, 10 நாட்கள் தற்காலி போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இருதரப்பினரும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்து வரும் நிலையில், மேற்காசியாவில் அமெரிக்க காலாட்படையினரை குவிக்கப்பட்டு வருவது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதாவது, ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய ஈரான் பார்லி சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்கப் படைகளின் வருகையை எதிர்கொள்ள ஈரான் படைகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், " அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்து விட்டு, மறுபுறம் ரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக எங்கள் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை அழிக்கத் தயாராக உள்ளோம்," என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,000-ஐ கடந்துள்ளதாக ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

Advertisement