56 சதவீத வளர்ச்சியுடன் கூட்டுறவு சங்கங்கள் சாதனை

கோவை: கோவை மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 56 சதவீத வளர்ச்சி பெற்று, கடன் வரம்பை அதிகரித்துள்ளதுடன், ரூ,1,200 கோடி வைப்பு நிதியைத் திரட்டியுள்ளன.

கோவை மாவட்டத்தில், கோவை சரகத்தில் 60, பொள்ளாச்சியில் 47 என 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2024ம் நிதியாண்டு இறுதியில் 47 சங்கங்களின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சில சங்கங்கள் வெறும் ரூ. 3 கோடிக்கும் குறைவான அளவிலேயே கடன் வழங்கி இருந்தன.

கடந்த நிதியாண்டில், இதனை சரி செய்யும் விதத்தில், சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முகாம்கள் நடத்தியும், வீடு தேடிச் சென்றும் கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வைப்பு நிதிகளும் திரட்டப்பட்டன. இதையடுத்து, 2025 மார்ச் 31ம் தேதி, அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் சராசரியாக ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கின.

57 சங்கங்கள், ரூ. 8 கோடிக்கும் கீழ் கடன் வழங்கி இருந்ததால், 2025----2026ம் நிதியாண்டில் அதை விட கூடுதலாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி கூறியிருப்பதாவது:

நடப்பாண்டு மார்ச் வரை அனைத்து சங்கங்களும் ரூ. 8 கோடிக்கும் கூடுதலாக கடன் வழங்கியுள்ளன. இவ்வகையில் தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என கோவை பெருமை பெற்றுள்ளது. முந்தைய மற்றும் நடப்பு நிதியாண்டில் கோவை மாவட்ட சங்கங்கள் 56 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும் ரூ.1,200 கோடி அளவுக்கு வைப்பு நிதியை திரட்டி சாதனை புரிந்துள்ளன, என தெரிவித்துள்ளார்.

Advertisement