'பீஹார் நிதிஷ் நிலைமை தான் புதுச்சேரி ரங்கசாமிக்கும் வரும்'

புதுச்சேரி: ''புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை எப்படி கவிழ்க்கலாம் என பா.ஜ., தனக்கு தெரிந்த ரூட்டில் சிந்தித்து வருகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 'இண்டி' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் எப்பவும் ஒன்றாகத்தான் தேர்தல் நடக்கும். ஆனால், தற்போது புதுச்சேரிக்கு முன்கூட்டியே நடத்துகின்றனர்.

தேதியை மாற்றினால் நம்முடைய உணர்வுகளை மாற்றிவிட முடியுமா? 'சங்கே முழங்கு' என பாடிய பாரதிதாசன் மண்ணில் நின்று புதுச்சேரியை நாசமாக்கியுள்ள சங்கி படையை விரட்டியடிக்க வேண்டும்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும். 16 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியாச்சு. ஆனால், மத்திய அரசுக்கு மனமில்லை; இல்லை என கையை விரித்து விட்டனர்.

இங்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'டபுள் இன்ஜின்' ஆட்சியால் புதுச்சேரி வளர்ச்சி அதிகமாக உள்ளதாக பேசியுள்ளார்.

எங்கு வளர்ந்துள்ளது புதுச்சேரி? ஒருவேளை கடலுக்கு அந்த பக்கம் இருக்குமா? பல கோடி ரூபாய் மதிப்பில் போலி மருந்து தயாரித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்கினர். ஆனால், விசாரணை முடக்கப்பட்டது.

இதுதான் டபுள் இன்ஜினின் லட்சணம். இப்படிப்பட்ட டப்பா இன்ஜினை மறுபடியும் கொண்டு வருவோம் என பேசலாமா? இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்திக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும்தான் காரணம்.

முதல்வர் ரங்கசாமிக்கு, பீஹார் நிதிஷ் குமார் நிலை வரும். தனக்கு தெரிந்த ரூட்டில் ரங்கசாமியை எப்போது, எப்படி கவிழ்க்கலாம் என பா.ஜ., சிந்திக்கிறது.

இது ரங்கசாமிக்கும் தெரியும். அவரும் சாமானியப்பட்டவர் இல்லை. புதுச்சேரி மக்கள் மாற்றத்துக்கு, புதிய விடியலுக்கு தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement