செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!

11


கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக, அவரது தம்பி அசோக்குமார் மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திங்கள் கிழமை முகூர்த்த தினம் என்றாலும், காலை 10:30 - 12:00 மணி வரை எமகண்டம்.
அதனால், வேட்பு மனு தாக்கலுக்கு, மதியம் 1:00 - 1.30 மணி வரை தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி பதிவு செய்திருந்தார்.



மதியம் 1:00 மணிக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் வந்த அவர், மனு தாக்கல் செய்தபோது, மனுவில் கையெழுத்திடும் முன், அங்கிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்து, மதியம் 1:10 மணிக்கு கையெழுத்திட்டார். ஏனெனில், நேற்று மதியம் 1.30க்கு மேல் குளிகை காலம். மேலும், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தபோது, கையில் எலுமிச்சை வைத்திருந்தார்.


வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வர வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், செந்தில் பாலாஜியுடன் கூட்டணி கட்சியினர், வக்கீல்கள் என ஒன்பது பேர் இருந்தனர். அவர்களை தேர்தல் பிரிவினரும், போலீசாரும் வெளியேற்றவில்லை. இதையடுத்து, கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜிக்கு மாற்று வேட்பாளராக, அவரது தம்பி அசோக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


அவர் மனு தாக்கல் செய்தபோது, கண்ணாடி அணிய மறந்து விட்டார். உறுதிமொழி வாசிக்கச் சொன்னபோது, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். ஏற்கனவே, கரூர் தொகுதியிலும் தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜனுக்கு மாற்று வேட்பாளராக, செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement