அரசு நிலத்தில் வசித்தோருக்கு பட்டா என் கோரிக்கையால் வழங்கப்பட்டது: மதுரவாயலில் தி.மு.க., காரம்பாக்கம் கணபதி பெருமிதம்

மதுரவாயல்: ''சட்டசபையில் நான் முன்வைத்த வீட்டுமனை பட்டா கோரிக்கையை ஏற்று, அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கினார்,'' என, தி.மு.க., வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி தெரிவித்தார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு வார்டாக சென்று, தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவருடன், மண்டல குழுத் தலைவர் நொளம்பூர் ராஜன், வட்ட செயலர் ஸ்டாலின், அன்னதாசன், ரூபன், ஆலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது காரம்பாக்கம் கணபதி பேசியதாவது:

வட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். தமிழக மக்கள், குறிப்பாக மதுரவாயல் தொகுதி மக்கள், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என, உறுதியுடன் இருக்கின்றனர். 2026ல் 'தி.மு.க., - 2.0' ஆட்சி அமைவதற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள், பிற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எங்கள் தேர்தல் அறிக்கையே, இந்த தேர்தலின் கதாநாயகன். மகளிர் மற்றும் முதியோருக்கான உரிமைத் தொகை உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையில் என் கன்னிப் பேச்சில், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று, தமிழக முழுதும் ஆய்வு நடத்தி பட்டா வழங்கும் நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். இந்த தொகுதியில் வீட்டு வசதி வாரிய நிலங்களில் வசிக்கும் 15,000 பேருக்கு பட்டா பெற்றுத் தந்துள்ளேன்.

எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ள, என் மொபைல் போன் எண்ணை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளேன். மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement