தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னேரி:சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப்படும் தனியார் பேருந்துகளால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

பொன்னேரி தேரடி சாலையில், இருந்த பேருந்து நிலைய கட்டடம் பாழடைந்ததால், அதை நகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு இடித்து அகற்றியது. அதைத் தொடர்ந்து 1.45 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதனால், பொன்னேரி தேரடி சந்திப்பு, பழைய பேருந்து நிலைய வளாகம், அம்பேத்கர் சிலை ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்க தற்காலிக நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அவை அங்கிருந்து பயணியரை இறக்குவதும், ஏற்றிச்செல்வதுமாக உள்ளன. ஆனால், தனியார் பேருந்துகள், கட்டுமான பணிகள் நடக்கும், பேருந்து நிலைய சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், அந்த சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் நகராட்சியின் அறிவுறுத்தலை பின்பற்றும் நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். அடாவடியாக சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி, இடயூறு ஏற்படுத்துவதாகவும், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement