நிலமே இல்லாத பழனிசாமி விவசாயி என்று ஏமாற்றலாமா: அமைச்சர் பெரியகருப்பன் கேள்வி

திருப்புத்துார்: விவசாய நிலமே இல்லாத முன்னாள் முதல்வர் பழனிசாமி, பச்சைத் துண்டை போர்த்திக் கொண்டு எப்படி தன்னை விவசாயி என்று கூறலாம், என திருப்புத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றோம். அதை அப்போதைய முதல்வர் பழனிசாமி மறுத்தார். இன்று கோர்ட் தீர்ப்பு மூலம் அது உறுதியாகியுள்ளது.

பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தி.மு.க.,வின் வாக்குறுதி தங்கத்திற்கு ஈடானது.

நான் விவசாயி என்று மூச்சுக்கு 300 முறை கூறிய பழனிசாமி, தனது 'அபிடவிட்' இல் தனக்கு விவசாய நிலமே இல்லை என்கிறார். எப்படி விவசாயி என்று மக்களை ஏமாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் பச்சை துண்டு போர்த்தினால் விவசாயியா என கேட்கும் பழனிசாமி, நிலமே இல்லாமல் தன்னை எப்படி விவசாயி என கூறிக்கொள்கிறார். அவரது மனைவி பெயரில் கூட விவசாய நிலம் இல்லை. நிலமே இல்லாமல் பச்சைத்துண்டை கட்டி விவசாயி எனக்கூறி ஏமாற்றலாமா.

த.வெ.க., தலைவர் விஜய் என்னை முதல்வராக்குங்கள் நான் கிராமம், கிராமமாக செல்கிறேன் என்கிறார். இது சாத்தியமானதா. அவர் ஒரு கூட்டத்துக்கு போறதே கஷ்டமா இருக்கு. முதல்வராயிட்டா நிர்வாக பணிகள் இருக்கும் போது எப்படி போக முடியும்.

தமிழகத்தில் அரசு துறைக்கு இணையான சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 12 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அரசின் ஒத்துழைப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருந்ததால் தான் புதிய தொழில் முதலீடுகள் வந்து வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.

Advertisement