100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய நடவடிக்கை

புதுச்சேரி: 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய தேர்தல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு அளிக்க சாய்வுதள வசதி, சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் இருக்கும். வர இயலாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க அவர்களுக்கு நேரடி முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ​உடல் வெப்பத்தைத் தணிக்க வாக்காளர்கள் ஈரமான துண்டுகளை உடன் எடுத்து வரவேண்டும். வெப்பம் அதிகமாக இருப்பதால், பெண் வாக்காளர்கள் குழந்தைகளை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும்.

​ceopuducherry.py.gov.in ​இணையதளத்திலும், 0413-1950 கட்டணமில்லா எண் மற்றும் ஓட்டுச் சீட்டில் உள்ள கி.யூ.ஆர் கோடு -ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் ஓட்டுச்சாவடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement