தி.மு.க. அரசு எங்களை கண்டுக்கவே இல்லை :சின்னவேடம்பட்டி 'இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன்' குற்றச்சாட்டு

கோவை:கோவையில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க. கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இங்குள்ள குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் பிரச்னைகளில், அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என்று தொழில் அமைப்பொன்று குற்றஞ்சாட்டுகிறது.

நாட்டிலேயே 'ஜாப் ஆர்டர்கள்' அடிப்படையில் அதிகம் இயங்கும் குறு நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் தான் உள்ளன. ஜி.எஸ்.டி., அமலான போது ஜாப் ஆர்டர் செய்யும் குறு நிறுவனங்களுக்கு 18 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர் வலியுறுத்தலால், 2019-ம் ஆண்டு 12 சதவீதமானது. அதை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

''ஆனால் 2025 அக்.,ல் மீண்டும் 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டது, எங்களுக்கு பேரிடி,'' என்கிறார், சின்னவேடம்பட்டி 'இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன்' தலைவர் தேவகுமார்.

அவர் கூறுகையில், ''மாநில நிதித்துறையின் பரிந்துரையின்றி, மத்திய அரசு வரியை உயர்த்த வாய்ப்பில்லை. மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை குறு, சிறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி எங்கள் கருத்துகளை கேட்கிறார்கள்.

மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கிய ரூ.25 ஆயிரம் கோடி நிதியில், தி.மு.க., அரசு 60 சதவீத நிதியை தான் பயன்படுத்தியுள்ளது. இதனால் பட்ஜெட்டில் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவு குறைந்துவிட்டது,'' என்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், புதிய மேம்பாலங்கள், சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதியில் கவனம் செலுத்தவில்லை என்பதும் இந்த அமைப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

Advertisement