மாநில அரசு விதை பண்ணையில் நெற்கதிரில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு  

விழுப்புரம்: இருவேல்பட்டு மாநில அரசு விதை பண்ணையில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு அடைவதற்காக நெற்கதிர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு அடைய கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி, வேளாண் துறை மூலம் அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்கதிர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில் உள்ள இருவேல்பட்டு மாநில அரசு விதை பண்ணையில் நேற்று நடந்தது.

இதில், 10 ஆயிரம் நெற்கதிர்களை கொண்டு ஒரு ஏக்கர் பரப்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதற்கு மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 45 நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன், துணை இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சரவணன், திருவெண்ணெய்நல்லுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, பண்ணை மேலாளர் ரமணி கீதா உட்பட அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார். இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, அருகேவுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.

Advertisement