பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு

திருச்சி: துறையூர், காசி விஸ்வநாதர் கோவில் முகப்பில் இருந்த சிற்பங்களை சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றதாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர், மூங்கில் தெப்பக்குளம் அருகே, பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், கடந்த 2024ல் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இருப்பினும் , சில பணிகள் மட்டும் நிறைவடையாமல் உள்ளன.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாக இருந்த போதிலும், அங்கு பராமரிப்பு பணிகள் செய்த சிலர், கோவிலை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்த கோவிலின் நுழைவாயில் மண்டபத்தின் மீது, சிவபெருமான் வரலாற்றை கூறும் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முன் மண்டபத்தின் மீது உள்ள சுதை சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு, தனியார் அமைப்பினர் அறநிலையத் துறையிடம் அனுமதி கோரி இருந்தனர்.

இந்நிலையில், கோவில் முன் மண்டபத்தின் மீது இருந்த சிற்பங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தன.

கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயலட்சுமி, ஸ்ரீதர், நக்கீரன் ஆகிய மூவர் சிலையை உடைத்ததாக, துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement