சிறுமியர் பலாத்கார வழக்கு; 2 பேருக்கு 'இரட்டை ஆயுள்'

திண்டுக்கல்: சிறுமியரை மிரட்டி பலாத்காரம் செய்த உறவினர் உட்பட, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை சேர்ந்த, 35 வயது பெண்ணுக்கு, 13, 12 வயதுகளில் இரு மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறில், கணவரை பிரிந்த பெண்ணுக்கு, தேனி மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன், 36, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்யாமல், திண்டுக்கல்லில் குடும்பமாக வசித்தனர். இதனிடையே, சிறுமியர் இருவரையும் விக்னேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த சிறுமியரின் தாய், மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில், விக்னேஸ்வரன் மட்டுமல்லாது, பெண்ணின் கணவரது நெருங்கிய உறவினர் முருகவேல், 41, என்பவரும் சிறுமியரை மிரட்டி, பலாத்காரம் செய்தது தெரிந்தது. இருவரையும், மகளிர் போலீசார் கைது செய்தனர்.

முருகவேல், விக்னேஸ்வரன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததுடன், அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும், திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யதாரா தீர்ப்பளித்தார்.

Advertisement