வெளி மாநிலங்களில் வசிப்பவர்களை ஓட்டுக்காக துாக்கி வர கட்சிகள் தீவிரம்

வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களை தேர்தலில் ஓட்டு போட அழைத்து வர வாகன வாடகை, உணவு உள்ளிட்ட செலவுகளை தாராளமாக செய்ய பிரதான அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் கடும் பலப்பரீட்சை செய்து வரும் நிலையில் இவர்களுடன் த.வெ.க., மற்றும் நா.த.க., ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை ஆகிய தொகுதிகளில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சுயேச்சைகள் பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதனால் ஓட்டுகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒவ்வொரு ஓட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு கட்சியும் தங்களின் ஓட்டு வங்கி குறையாமல் தேர்தலில் ஓட்டுப்பதிவாக மாற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி உள்ளவர்களை ஓட்டு போட தேர்தல் அன்று சொந்த ஊர் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் வந்து, செல்ல வாகன வாடகை, உணவு, மற்றவர்களை விட இவர்களுக்கு ஓட்டுக்கு கூடுதல் பணம் கொடுத்து அழைத்து வர உள்ளனர். எந்த மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை பட்டியலிட்டு அந்தந்த பகுதிக்கு முன்கூட்டியே வாகனங்களை அனுப்பியோ அல்லது அங்கிருந்து வாடகை வாகனம் மூலமோ அழைத்து வர பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது.

-நமது நிருபர்-:

Advertisement