கிராம கடைகளில் மதுபானம் விற்பனை எம்.எல்.ஏ., புகார்

கோலார்: ''கோலார் தாலுகாவில், பல கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. கலால்துறை அதிகாரிகள் அதை கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்,'' என, கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் எச்சரிக்கை விடுத்தார்.

கோலார் மாவட்ட பஞ்சாயத்து மண்டபத்தில், கோலார் தாலுகா அளவிலான வளர்ச்சி பணிகள் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது:

கோலார் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களின் சில்லரை கடைகளில், சட்டவிரோதமாக மது பானங்கள் விற்கப்படுவதாக, பல பெண்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

கலால் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்துகின்றனர். அதற்கு முன்னரே, கலால் துறை அலுவலகங்களில் உள்ளவர்கள் மதுபான விற்பனையாளர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். சோதனை நடத்த அந்த இடத்திற்கு செல்லும் போது, அங்கு எதுவும் கிடைப்பதில்லை.

கலால் துறையின் சில அதிகாரிகளுக்கும், மதுபான கள்ளச்சந்தை வியாபாரத்துக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வருகிறது.

இதுதொடர்ந்தால் சும்மா இருக்க மாட்டேன். கிராமங்களில் சட்ட விரோத மதுபான விற்பனையை சோதனை நடத்தி கட்டுப்படுத்த முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு கலால்துறை அதிகாரி வெளியிட்ட பதில் அறிக்கையில், 'சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவது தொடர்பாக, இதுவரை, 174 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் . கடுமையாக எச்சரித்துள்ளோம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement