100 நாள் வேலை 150 நாளாக வழங்கப்படும்- அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பெரும்பாக்கத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகளையும், கிராமங்களின் வளர்ச்சியையும் வாக்காளர்களிடையே எடுத்து கூறி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுராந்த கம் - தனி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் நேற்று தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம், மொறப்பாக்கம், எல். எண்டத்துார், தண்டரை புதுச்சேரி, செம்பூண்டி, தீட்டாளம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், மதுராந்தகம் அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, மரகதம் குமரவேல் கூறியதாவது:

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் என, அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சி நடைபெறும். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தி.மு.க., நிறுத்தி உள்ளது.

தாலிக்கு தங்கம், பசுமை வீடு, அம்மா உணவகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட மகத்தான திட்டங்களை அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் நிச்சயம் நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் கூறினார் .

நிகழ்வில் மாவட்ட இளை ஞர் அணி இணை செயலர் பெரும்பாக்கம் மனோகரன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement