விவசாய சங்கம் - தி.மு.க.,வினர் கைகலப்பால் 9 பேருக்கு காயம்

கரூர்: கரூர் அருகே, கோவில் இனாம் நிலம் தொடர்பான பொதுக்கூட்டத்துக்கு, துண்டு பிரசுரம் கொடுத்த விவசாய சங்கத்தினருக்கும், தி.மு.க.,வினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த, 9 பேர் காயமடைந்தனர்.

தமிழக விவசாய சங்கம், கரூர் மாவட்ட இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு - மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில், நாளை மாலை, 5:00 மணிக்கு கரூர் வெண்ணைமலையில், இனாம் நிலம் தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில், பொதுமக்களை பங்கேற்க சொல்லி, நேற்று காலை வெங்கமேடு பகுதியில் விவசாய சங்கத்தினர் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, கரூர் மாநகர, 3வது வார்டு தி.மு.க., செயலர் நாகராஜ் உட்பட பலர், துண்டு பிரசுரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும், 9 பேர் காயமடைந்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவசாய சங்கத்தினரை, கரூர் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவரது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

கரூர் வெண்ணைமலையில், இனாம் நில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்காக, துண்டு பிரசுரம் வழங்கிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மீது, தி.மு.க., வார்டு செயலர் தலைமையில் வந்த கும்பல், தகாத வார்த்தை பேசி, கற்களால் தாக்கியதில் காயமடைந்துள்ளனர். தி.மு.க.,வினரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் இதற்கு தக்க பதிலை, தேர்தலில் வழங்குவர்.

இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement