புதிய தண்டவாள 'ஸ்லீப்பர்கள்' :அறிமுகப்படுத்தியது ரயில்வே

சென்னை:ரயில்வேயில், அதிக எடையை தாங்கும் திறன் கொண்ட புதிய தண்டவாள,'ஸ்லீப்பர்கள்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வேயின் அனைத்து பிரிவுகளிலும், புதிய தொழில்நுட்பங்கள் அமல் படுத்தப்படுகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, தண்டவாளம் மேம்பாடு மற்றும் நவீன தானியங்கி சிக்னல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், புதிய தண்டவாள 'ஸ்லீப்பர்கள்' அறிமுகம் செய்யப்பட உள்ளன; இது, தற்போது வடக்கு ரயில்வே மண்டலத்தில் சில இடங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. படிப்படியாக பிரதான வழித்தடங்களில் கொண்டு வரப்படும்.

தற்போதுள்ள கனமான இரும்பு மற்றும் கான்கிரீட் ஸ்லீப்பர்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ஸ்லீப்பர்கள் எடை குறைந்தவை. அதிக சுமைகளை தாங்கும் திறன் கொண்டவை. ஸ்டீல் உள்ளிட்ட கலப்பு பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும்.

மேலும், ஸ்லீப்பர்களை, அவை பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப, வடிவமைத்து மாற்றும் வசதி உள்ளது. கான்கிரீட் மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், கலப்பு பொருட்களால் உருவாக்கப்பட்ட, இந்த 'காம்போசிட் ஸ்லீப்பர்கள்' ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 700 கிலோ வரையிலான எடையை, தாங்கும் திறன் கொண்டவை.

இவை நீண்ட காலம் உழைக்கும். பராமரிப்பு செலவு குறையும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், தண்டவாளத்தை கண்காணிக்க முடியும். இதற்கான ரேடார் சாதனம், தண்டவாளத்தின் அடித்தளத்தில் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



***

Advertisement