பழைய வீடு வாங்கும் போது உறுதி தன்மை விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
சென்னை போன்ற நகரங்களில் புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளின் விலை வெகுவாக உயர்ந்து வருவது மக்களுக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீடுகளை வாங்குவதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
இதனால், புதிய வீடுகளுக்கு இணையாக பழைய வீடுகள் விற்பனை சந்தை தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குள் உள்ள பழைய வீடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது, வங்கிகளும் இதற்கு கடன் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதால், இது போன்ற வீடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. நீங்கள் ஒரு பழைய வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்தால், அது தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முதலில், எந்த பகுதியில் பழைய வீடு வாங்க போகிறோம் என்பதுடன் அதை கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பாருங்கள். அந்த கட்டடம் அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்களின் உண்மை தன்மை என்ன என்று பாருங்கள்.
இதற்கு அடுத்தபடியாக, அந்த கட்டடம் எப்போது கட்டப்பட்டது, அதற்கான கட்டட அனுமதி வரைபடம் உட்பட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்யுங்கள். அதில் வரைபடத்தில் உள்ளபடியே வீடு கட்டி முடிக்கப்பட்டு பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
இதில் கட்டடத்தின் மதிப்பு என்னவாக குறிப்பிட வேண்டும் என்பதை மதிப்பீட்டாளர் வாயிலாக கணக்கு பார்க்க வேண்டியது அவசியம். இத்துடன் அந்த கட்டடத்தில் விரிசல்கள், உடைப்புகள் எதுவும் காணப்படுகிறதா என்று பாருங்கள்.
சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்றுவிடுகின்றனர். எனவே, இது போன்ற பிரச்னையில் சிக்கி ஏமாறாமல் இருக்க, தொழில்நுட்ப ரீதியான ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த கட்டடம் எப்போது, எப்படி கட்டியிருந்தாலும் பரவாயில்லை, அதன் தற்போதைய ஸ்திர தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்யவேண்டும். தொழில்முறை கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம்.
கடன் கொடுக்கும் வங்கிகள் இது தொடர்பாக ஆய்வு செய்வதாக கூறினாலும், அது பெரும்பாலும், பெயரளவுக்கே இருக்கும். எனவே, நீங்கள் தனியார் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து கட்டடத்தின் உறுதி தன்மை குறித்த உண்மை நிலவரத்தை அறியலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்றுவிடுகின்றனர் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும்
-
மீன்பிடி தடையால் மீனவர்களின்றி ராமேஸ்வரம் கடற்கரை 'வெறிச்'
-
சாரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தி.மு.க.,விற்கு எதிராக பிரசாரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் பேட்டி
-
தமிழகத்தில் ஆட்சி செய்வது சபரீசன்: மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
-
பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என தி.மு.க., பொய் பிரசாரம்: கம்பத்தில் தினகரன் பேச்சு
-
இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்