பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என தி.மு.க., பொய் பிரசாரம்: கம்பத்தில் தினகரன் பேச்சு

கம்பம்: பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி, பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என மாய பிம்பத்தை தி.மு.க., ஏற்படுத்துவதாக அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜக்கையனை ஆதரித்து அவர் பேசியதாவது :

பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி, பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என கடந்த 3 தேர்தல்களில் மாய பிம்பத்தை உருவாக்கி தி.மு.க., வெற்றி பெற்றது.

ஹார்முஸ் நீரினையை இந்திய கப்பல்கள் கடக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான், இந்தியாவை நட்பு நாடு என்று நேசக்கரம் நீட்டியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு பா.ஜ., எதிரி என்றால் ஈரான் நட்பு கரம் நீட்டுமா.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார். கேரளாவிற்கு அழுத்தம் கொடுத்தால், இங்கு கூட்டணி ஆட்டம் கண்டு விடும் என்பதால் முல்லை பெரியாறு பிரச்னையை தி.மு.க., கண்டு கொள்ளவில்லை.

சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருட்கள் நடமாட்டம். சென்னை அருகே வீட்டில் இருந்த கல்லுாரி மாணவி வெட்டப்பட்டுள்ளார்.

நானும் பழனிசாமியும் திட்டிக் கொண்டோம் என்கின்றனர். வீடு என்று இருந்தால் அண்ணன், தம்பிக்குள் சண்டை வருவது சகஜம் தானே.

இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம். எனவே மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார்.

Advertisement