வெற்றி பெற்றால் இதெல்லாம் நடக்கும்! தி.மு.க., சுதாகர் பட்டியல் போட்டு பிரசாரம்

வால்பாறை: வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆனைமலை, வால்பாறை பகுதியில் தி.மு.க., வேட்பாளர் குட்டி (எ) சுதாகர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மாரப்பகவுண்டர்புதுார், செம்மேடு, ஒடையகுளம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற வேட்பாளரை மக்கள் மலர் துாவி வரவேற்றனர்.

பெரியபோது மாகாளியம்மன் கோவிலில் ஊர் பொதுமக்கள் பிரார்த்தனை செய்து, வேட்பாளர் சுதாகருக்கு வெற்றி வேல் அன்பளிப்பாக வழங்கினர். தேர்தல் பிரசாரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைசெல்வி சாந்தலிங்ககுமார், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி செயலாளர் பார்த்திபன், ஓடையகுளம் பேரூராட்சி செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க., வேட்பாளர் குட்டி (எ) சுதாகர் பேசியதாவது:

பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலையில் அரசு கலைக்கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கொண்டு வரப்படும். ரேஷன்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கொப்பரை விலை சரிவை தடுக்கப்படும்.

ஆதிதிராவிட காலனியில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும். பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் தெருவிளக்கு அமைத்து, போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.

வால்பாறை, ஆனைமலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டு, மக்கள் குறைகள் கேட்கப்படும். வால்பாறை அடுத்துள்ள சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும். படித்த இளைஞர்களுக்கு வால்பாறையிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஐ.டி.,பார்க் அமைக்கப்படும்.

வால்பாறை நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மூன்று சென்ட் இடத்தில் வீடு கட்டித்தரப்படும். வால்பாறை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், சின்கோனா அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் கல்லுாரி துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, பேசினார்.

Advertisement