அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரமங்கலம்:அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரமங்கலம் குறு வட்டத்தைச்சேர்ந்த அக்கமாபுரம் கிராமத்தில், பொது குளம் உள்ளது. இந்த குளத்தை, 3 ஆண்டுகளுக்கு முன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், குளம் துார்வாரி கற்கள் பதித்தனர்.

இக்குளம், கண்டிவாக்கம் கூட்டு சாலையில் இருந்து, அக்கமாபுரம் வழியாக, நாகப்பட்டு கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த குளம் சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்கவில்லை. மேலும், குளத்தை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், குளத்தில் இருக்கும் நிலத்தடி நீரும் குறையும் அபாயம் உள்ளது.

இதனால், ஆடு, மாடுகள் குடிக்க நீரின்றி அவதிக்குள்ளாகி வரும் சூழல் உருவாகி உள்ளது என, கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

எனவே, அக்கமாபுரம் குளத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு, தண்ணீரை தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement